சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 9 வயது மகள் நேகா அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் நேகா 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாணயம் சிறுமியின் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியின் தொண்டை பகுதியில் எக்ஸ்ரே எடுத்தனர். இதனையடுத்து தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை எடுப்பதற்கு மயக்கவியல் டாக்டர்கள் இளங்கோ, அபிராமி ஆகியோர் மயக்க மருந்து கொடுத்தனர். பின்னர் உள்நோக்கி என்ற கருவி மூலம் தொண்டையில் சிக்கியிருந்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியே எடுக்கப்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் குழுவை மாவட்ட இணை இயக்குனர் பானுமதி, மருத்துவ அலுவலர் புஷ்பவள்ளி, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.