கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தலைவிரித்தாடுகிறது. பாதசாரிகள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் என யாரும் அச்சமின்றி வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, கேரளாவில் தெருநாய் கடியால் ரேபிஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபிஷேக், நிஹால், சதீன் முகம்மது சுபைர் ஆகியோர் தெருநாய்களை விரட்டும் புரட்சிகரமான ‘மந்திரக்கோல்’ ஒன்றை கண்டுபிடித்து, தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பு தெரு நாய்களை பயமுறுத்தி விரட்டுவதற்கு மனிதர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரக்கோல், எலக்ட்ரானிக் சர்க்யூட் பொருத்தப்பட்டு, சுவிட்சை அழுத்தினால் விலங்குகளுக்கு விரும்பத்தகாத மீயொலி, வாசனை மற்றும் லேசான அதிர்வலைகளை வெளியிடுகிறது.

இவை மனிதர்களுக்கு கேட்கவோ, உணரவோ முடியாதவை என்பதால், பயன்படுத்துவோருக்கு எந்த தொந்தரவும் இல்லை. இயற்பியல் ஆசிரியர் பிரகித் வழிகாட்டுதலில் மாணவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். டெல்லியில் நடந்த ‘புதுமை மாரத்தான்’ நிகழ்வில் இந்த கண்டுபிடிப்பு பரிசு பெற்று, தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

மேலும், இதை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய ரூ.50,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த மந்திரக்கோலுக்கு காப்புரிமை பெற்று, தொழில் தொடங்கும் முயற்சியில் மாணவர்களும் ஆசிரியரும் ஈடுபட்டு வருகின்றனர்.