காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைக்கு சீமான் தான் காரணம் என்று கூறியிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மறைமுகமாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிரச்சனையை ஊக்குவிக்கும் விதமாக சீமான் பேசி வருகிறார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கே.எஸ் அழகிரியின் குற்றசாட்டுக்கு தற்போது சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கே.எஸ் அழகிரி வட மாநிலத்தவர்கள் குறித்த சர்ச்சைக்கு சீமானும் பாஜகவும் தான் காரணம் என்று கூறியது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறியதாவது, பைத்தியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர் யார். முதலில் ராகுல் காந்தியை என்னிடம் பேச சொல்லுங்கள். மேலும் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள் என்று கூறினார்.