அசாம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியை சேர்ந்தவர் அமர்ஜோதி. இவருடைய தாயார் சங்கரி ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தனா கலீடா எனும் பெண்ணுடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தன் கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி ஆகியோரை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் வந்தனா புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வந்தனா அளித்த மற்றொரு புகாரில், தன் மாமியாரின் 5 வங்கிக்கணக்கில் இருந்து அமர்ஜோதியின் தாய்மாமன் பணம் சுருட்டிக்கொண்டு ஓடி விட்டார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே காவல்துறையினரின் விசாரணையில் ATM கார்டை பயன்படுத்தி வங்கிக்கணக்கு ஒன்றிலிருந்து வந்தனா ரூ.5 லட்சம் பணம் எடுத்தது தெரியவந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த காவல்துறையினர் சில தினங்களுக்கு முன் வந்தனாவை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது கணவர், மாமியாரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு தன்ஜீத் தேகா என்ற நபருடன் வந்தனாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அமர்ஜோதியின் தாயாருக்கு கவுகாத்தியில் சந்த்மாரி பகுதியில் 5 கட்டிடங்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்றில் வந்தனாவின் மாமியார் வசித்ததோடு, மீதி 4 கட்டிடங்களை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் வாடகை வசூலை அமர்ஜோதியின் தாய் மாமன் கவனித்து வந்துள்ளார். இதில் அதிருப்தியடைந்த வந்தனா, கணவருடன் சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் வந்தனா முதலில் அரூப்தாஸ் என்பவர் உதவியுடன் மாமியாரை கொலை செய்ததோடு, உடல்பாகங்களை 3 நாட்களாக பிரிட்ஜில் வைத்துள்ளார். அதனை தொடர்ந்து கள்ளக்காதலனான தன்ஜீத் உதவியுடன் வந்தனா, அமர்ஜோதியை கழுத்து நெரித்து கொடூர கொலை செய்துள்ளார். பின் இருவரின் உடல் பாகங்களையும் துண்டுகளாக்கி பாலித்தீன் பைகளில் போட்டு மேகாலயா அருகில் 60 அடி பள்ளத்தில் வீசி சென்றுள்ளனர். வந்தனா அளித்த தகவலின் படி, தன்ஜீத் தேகா மற்றும் அரூப்தாஸ் கைது செய்யப்பட்டனர். விவாகரத்து மற்றும் சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.