லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டவர்கள்   நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முன்னதாக லியோ பட குழு தரப்பு நிறுவனம் அக்டோபர் 19ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7.00 மணிக்கும்,  20 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை காலை 7. 00 மணிக்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பு வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு லியோ படத்தின் சிறப்பு காட்சி தொடர்பான சில அறிவுரைகளையும் வழங்கியிருந்தது.

அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லியோ சிறப்பு காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளருக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

அதில் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டுமே என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரைப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறப்பு காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் லியோ படத்தை திரையிட காலை நான்கு மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும்.  அதேபோல காலை 9 மணி என்பதற்கு பதிலாக காலை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அனிதா சுமந்த் முன்பு முறையிடப்பட்டது. இந்த முறையிட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.