பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ் என்பவர் 2023 ன் பிரபலமான நபர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய சில வசனங்கள், அவரது உடல் பாவனைகள் மீம் கிரியேட்டர்களுக்கு மிகவும் பிடித்துப் போக அவரை ட்ரெண்ட் செய்து விட்டார்கள். தற்போது தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான நபராக லாரன்ஸ் மாறி போக, நிகழ்ச்சியில் அவர் கூறிய சில தகவல்கள் அடிப்படையில் அவர் எங்கே இருக்கிறார் ? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் யூடியூபர்கள் இறங்கி விட்டனர்.

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் அவர் பணிபுரிந்ததாக நிகழ்ச்சியில் தெரிவித்த நிலையில், அங்கே களத்தில் இறங்கி விசாரிக்கையில், அவரது உண்மையான பெயர் மாரியப்பன் என்பதும், மீசை காரணமாக விருமாண்டி என்ற பெயர் இருப்பதும், மதுவுக்கு மிகவும் அடிமையான நபர் என்பதும் தெரியவந்தது. இவரை தேடுவது குறித்த வீடியோ-ஐ சமீபத்தில் வெளியான விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களின் வசனங்களை கொண்டு எடிட் செய்து இணையத்தில் வெளியிட அனைவரும் இவரது கதை லியோ படத்தின் கதையை மிஞ்சுவது போல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோயம்பேட்டில் மூட்டை தூக்கி வேலை பார்த்து வந்த லாரன்ஸ் என்னும் மாரியப்பன்  என்ற அந்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே வரவில்லை என்பதால், அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அவர் தனது சொந்த ஊரில் சென்று தஞ்சம் அடைந்திருப்பதாக செய்தி வர, அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு தங்களது தேடுதல் வேட்டையை நெட்டிசன்-களும் யூடியூபர்களும் தீவிரப்படுத்தி உள்ளனர். அது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.