கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடைக்குள் படையப்பா என்ற காட்டு யானை புகுந்தது.

இதையடுத்து கடைக்குள் வைத்திருந்த வெங்காயம் மற்றும் மைதாவினை சாப்பிட்டு சென்றுள்ளது அந்த காட்டு யானை. இதே கடைக்குள் கடந்த 2 மாதங்களில் 6 முறை அந்த காட்டு யானை கதவை உடைத்து உணவுப்பொருட்களைச் சாப்பிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிகள், கடைகளை குறிவைத்து அட்டகாசம் செய்துவரும் கொம்பன் மற்றும் படையப்பா காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.