காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று சட்டமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகம் எதிரே உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். போராட்டத்திற்காக சிறை சென்ற குடும்பம் 2 வருடங்கள் இல்லை, 20 வருடங்கள் சிறை விதித்தாலும் மக்களுக்காக ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கும். மத்திய அரசின் ஏற்பாட்டின் படி தான் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான வழக்கை நீதிமன்றத்தில் துடைத்தெறிவோம். ராகுல் காந்திக்கு ஒன்று என்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும். மேலும் நாடாளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சனைகளை திசை திருப்ப ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து செயல்படுகிறது என்று கூறினார்.