டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, திங்கட்கிழமை ரீகன் தேசிய விமான நிலையத்தில் யாரும் எதிர்பாராத நாடகத்துடன் தொடங்கியது. அதிகாரிகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே, சுகாதார மற்றும் மனித சேவைகள் துறைச் செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், விமானப் புறப்பாடு மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு புல்-அப் கம்பியை நோக்கிச் சென்றார்.

 

தனது சட்டையைத் தளர்த்திக் கொண்டு, அவர் அடுத்தடுத்துப் புல்-அப்களைச் செய்யத் தொடங்கினார். அதைப் பார்த்த பயணிகள், அவர் செய்யும் எண்ணிக்கையை எண்ணத் தொடங்கினர். கென்னடி தனது இறுதி எண்ணிக்கையை முடிக்கும்போது, அவர்களின் குரல்கள் டெர்மினல் முழுவதும் ஒலித்தது. அவர் இருபது புல்-அப்களை முடித்தவுடன், தரையில் இறங்கி, தன் உடையைச் சரிசெய்து கொண்டார்.

இது எல்லாமே திட்டத்தின் ஒரு பகுதி போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, முன்னாள் காங்கிரஸ்காரர் சீன் டஃபி தனது முறைக்காக முன்வந்தார். விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் இந்த அசாதாரணக் காட்சியைக் காணத் தங்கள் கைப்பேசிகளில் படமெடுக்கத் தொடங்கினர். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவி கொள்கை வெளியீட்டு நிகழ்வை எதிர்பாராத வைரல் தருணமாக மாற்றியது.

இந்த சாகசத்தின் மூலம், “பயணத்தை மீண்டும் குடும்ப நட்பு மிக்கதாக மாற்றுவோம்” என்ற டிரம்ப் நிர்வாகத்தின் ரூ. 8,300 கோடி (ஒரு பில்லியன் டாலர்) மதிப்பிலான புதிய திட்டம் தொடங்கப்பட்டது. விடுமுறைக் காலங்களில் குடும்பங்கள் பயணப்படும்போது ஏற்படும் குழப்பங்களைக் குறைக்கவே இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், விமான நிலையங்கள் குழந்தைகள் விளையாடும் இடங்கள், குடும்பப் பரிசோதனைப் பாதைகள், நரம்புத்திறன் சவால்களை உடைய பயணிகளுக்கான உணர்வு அறைகள், மற்றும் பால் கொடுப்பதற்கான தனி இடங்களை அமைக்க நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சிக் கூடங்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கென்னடி ஜூனியர் ஆரோக்கியமான உணவை வழங்குவதிலும் கவனம் செலுத்தினார்.  “விமான நிலையங்கள் முழுவதும் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் புதிய, முழு உணவுகளை அணுகும் வாய்ப்பைப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்தப் பல கோடி ரூபாய் முயற்சியானது மத்திய நிதி மற்றும் தனியார் துறை மேம்பாடுகள் இரண்டையும் இணைக்கிறது.