சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவரது அண்ணன் விஜயசிம்மனின் மனைவி துர்கா பாய்(35). இந்நிலையில் விஜயசிம்மனும், துர்கா பாயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த மாதம் 17-ஆம் தேதி துர்கா பாய் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் கௌசல்யாவின் வீட்டிற்கு சென்று என் குடும்பம் பிரிந்ததற்கு நீ தான் காரணம் எனக் கூறி தகராறு செய்துள்ளனர். அப்போது கர்ப்பிணியாக இருந்த கௌசல்யாவின் வயிற்றில் துர்கா பாய் தாக்கியுள்ளார்.

இதனால் வலி ஏற்பட்டு தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கௌசல்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பிறகு கடந்த 23-ஆம் தேதி குறை மாதத்தில் கௌசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. தனது குழந்தை குறை மாதத்தில் பிறந்து இறந்ததற்கு துர்கா பாய் தான் காரணம் என கௌசல்யா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் துர்கா பாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.