ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தற்போது 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பிறகு நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்  ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி  3-வது நாள் ஆட்ட நேர முடிவில்  3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோகித்தின் விக்கெட்டுக்கு பிறகு சுப்மன் கில் புஜாரா ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். கில் 194 பந்துகளில் சதம் அடித்து அசத்தார். புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 187 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. இதைத்தொடர்ந்து கில் 128 ரன்னில் LBW ஆகி வெளியேறினார். கோலி 59 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேட்ச் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது விராட் கோலி 100 ரன்கள் அடித்து அனைத்து விதமான போட்டிகளிலும் தன்னுடைய 75-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயருக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இவரை தங்களுடைய மருத்துவ குழு கண்காணித்து வருவதாக பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இன்னிங்ஸின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எஸ் பாரத் ஆகியோர் ஸ்ரேயஸ் ஐயருக்கு முன்பாக பேட்டிங் செய்ய வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.