இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்தபோது, தற்காலிக கேப்டன் கே.எல். ராகுல் தனது பந்துவீச்சாளர்கள் மீது திருப்தி அடையவில்லை. இந்திய அணி மலை போன்ற இலக்கை நிர்ணயித்தபோதும், அதைத் தடுக்கும் முயற்சியில் பிரசித் கிருஷ்ணாவிடம் ராகுல் பலமுறை கோபத்தைக் வெளிப்படுத்தினார். குறிப்பாக, டோனி டி சோர்சிக்கு பிரசித் கிருஷ்ணா பந்துவீசியபோது, ஆரம்பத் திட்டத்தில் இருந்து அவர் விலகியதால், ராகுல் எரிச்சலடைந்துள்ளார்.

ஸ்டம்ப் மைக்கில் பதிவான உரையாடலில், கன்னட மொழியில் பேசிய கே.எல். ராகுல், “பிரசித், உன் தலையை உடைக்காதே. நான் சொல்வதைச் செய். என்ன பந்துவீச வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னேன், அதை செய்” என்று பிரசித் கிருஷ்ணாவிடம் சீறியுள்ளார். அதற்கு பிரசித் கிருஷ்ணா, “தலையை நோக்கிப் பந்துவீசலாமா” என்று கேட்க, கேப்டன் ராகுல், “இப்போது தலையை நோக்கிப் பந்துவீசத் தேவையில்லை.

பிரசித், இப்பதானே உன்னிடம் சொல்லிட்டு வந்தேன். நீ மறுபடியும் தலையை நோக்கி வீசுகிறாய்” என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார். அந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கி, டெம்பா பவுமாவின் விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். போட்டிக்குப் பிந்தைய உரையாடலில், “பந்துவீச்சாளர்கள் முழு மனதுடன் முயற்சி செய்கிறார்கள், ஆனால் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. களத்தில் சில சாதாரண ரன்களை விட்டுக் கொடுத்தோம். மூன்று அம்சங்களையும் இறுக்கமாக்கினால், அந்த 20-25 ரன்கள் நமக்குச் சாதகமாக அமையும்” என்று ராகுல் வேதனையுடன் தெரிவித்தார்.