உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள சோர்காரி சந்திப்பில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒரு பரபரப்பான வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புர்கா அணிந்து பெண்ணாக மாறுவேடமிட்டு வந்த ஒருவர், உண்மையில் இளைஞராக இருப்பது கிராம மக்களால் கண்டறியப்பட்டது. இந்த இளைஞர், தான் காதலித்த ஒரு இந்து பெண்ணை சந்திக்க வந்ததாகவும், தனது அடையாளத்தை மறைக்கவே புர்கா அணிந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இவரது பெயர் சுஹேல் என அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் கிராம மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியதுடன், ‘லவ் ஜிஹாத்’ என்று சிலர் குற்றம்சாட்டி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காவல்துறை உடனடியாக இடத்திற்கு விரைந்து, சுஹேலை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இதுவரை எந்தவொரு முறையான புகாரையும் பதிவு செய்யவில்லை என்று காவல் நிலைய அதிகாரி ரஞ்சித் சிங் பதவுரியா தெரிவித்தார்.

புகார் பெறப்பட்டவுடன் மட்டுமே மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார். சுஹேலுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையிலான உறவு, இது முதல் சந்திப்பா, ஏன் புர்கா அணிந்தார் என்பது குறித்து காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் குடும்பம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, இதனால் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.