பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் ஒரு வாலிபருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகார் போலீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்த நிதிஷ் குமார் என்ற வாலிபர், கடந்த 7-ம் தேதி தனது கிராமத்தில் உள்ள நூலகத்திற்குப் (Library) படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் திடீரென கடத்தப்பட்டார்.

அவரை ஒரு ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்ற கும்பல், அவருக்கு வலுக்கட்டாயமாகப் போதை மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளது. பின்னர், அவர் சுயநினைவு இல்லாத நிலையிலேயே ஒரு கோவிலுக்குக் கூட்டிச் சென்று, சங்கர் ராய் என்பவரது மகள் லட்சுமிக்குக் கட்டாயத் தாலி கட்ட வைத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோவில், நிதிஷ் குமார் போதையில் தள்ளாடுவதும், வேறொரு நபர் அவரது கையைப் பிடித்து மணப்பெண்ணுக்கு மாலை போட வைப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்ட நிதிஷ், எப்படியோ தப்பித்து போலீசில் புகார் அளித்துள்ளார். பீகாரின் பழைய கலாச்சாரமான ‘மாப்பிள்ளையைக் கடத்தி கல்யாணம் செய்வது’ மீண்டும் தலைதூக்கியிருப்பது அப்பகுதி இளைஞர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.