உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டத்தில் உள்ள வி.ஐ.பி. இன்டர் காலேஜ் என்ற பள்ளியின் முதல்வர் ஒருவர், 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை தாக்கி, “உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது தோழியுடன் வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, முதல்வர் வீணா சர்மா அவர்களை அங்கிருந்து போகச் சொன்னதாகவும், மாணவி உடனடியாகப் பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்து, அவரது சடையைப் பிடித்து இழுத்துச் சென்று அடித்ததாகவும் மாணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பள்ளிகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய சூழலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய பெற்றோர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள், முதல்வரின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் மற்ற மாணவர்கள் மூலம் தெரிந்துகொண்டு, முதல்வர் மிரட்டுவது தெளிவாகத் தெரியும் வீடியோவைப் பெற்றுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணவி பயத்தில் உறைந்துபோயுள்ளதாகவும், மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தயங்குவதாகவும், மிரட்டல் காரணமாக அவரது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயல் குறித்து பில்குவா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ள அவர்கள், முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆசிரியர்கள் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர் – மாணவர்களுக்கு ஆலோசனை அவசியம் என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வீடியோ மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.