தாய் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிர்மா தேவி. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். பிர்மா தேவி இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தில் வசித்து வந்த நிலையில் சுரேஷ் வேலை நிமித்தமாக ஜோத்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் தனது கணவர் சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்து கூற நினைத்த பிர்மா தேவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜோத்பூர் சென்றுள்ளார்.

அங்கு சென்றவுடன் தனது கணவரின் தொலைபேசி எண்ணிற்கு பலமுறை பிர்மா தேவி அழைத்து பார்த்தும் அவர் எடுத்துப் பேசாததால் நேராக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிர்மா தேவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவர் சுரேஷ் அந்த வீட்டில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதை பிர்மா தேவி காணொளியாக பதிவு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய பிர்மா தேவி தான் பதிவு செய்த காணொளியை தனது கணவரின் தாய் தந்தைக்கு அனுப்பி விட்டு இரண்டு குழந்தைகளுடன் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு கணவர் சுரேஷ் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை தேடி வருகின்றனர்.