கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே கடலூர் புதுநகர் போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுச்சேரியில் இருந்து குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ராஜா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவருடன் வந்த குமாரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து குமார் மீண்டும் அங்கு வந்து எனது நண்பர் மீது எப்படி வழக்குபதிவு செய்யலாம் என கேட்டு ரோட்டில் வைத்து பிளேடால் கைகள், வயிறு பகுதிகளில் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனை பார்த்த போலீசார் குமாரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று குமார் சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.