ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சுமார் 3 வாரத்திற்கு மேல் இதே நிலை நீடித்ததால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் ஈரோடு-சக்தி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.