மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா (Air India) விமான ஊழியர் ஒருவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகப் பெண் பயணி ஒருவர் புகார் அளித்து, சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்தூரிலிருந்து மும்பை செல்லவிருந்த அவனி ரத்தோரே (Avani Rathiore) என்ற அந்தப் பயணி, எந்தக் காரணமும் இல்லாமல் விமான ஊழியர் ஒருவர் தனது போர்டிங் பாஸைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதற்கானச் சரியானக் காரணத்தைக் கூறாமல் விமான நிலையம் முழுவதும் தன்னைத் துரத்த வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தச் சம்பவம் தனக்குப் ‘பயமாகவும், உதவியற்றதாகவும்’ இருந்ததாகவும், இதனால் விமான நிலையத்தில் தாம் அழுதுவிட்டதாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த ஊழியரின் செயலைக் கண்டித்துப் பேசிய அவர், “எனக்குப் பதிலாக முதல்முறையாகப் பயணம் செய்யும் ஒருவர் இந்தச் சூழ்நிலையில் சிக்கினால், அவர்களின் நிலை என்ன ஆகும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பயணிகளைத் துன்புறுத்தியதற்காக அந்த ஊழியரைக் கண்டித்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.