இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய தீர்வுகளை வழங்குதல் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. விமான நிலையம் மற்றும் விமான பாதை போன்றவற்றை மேம்படுத்துதல், பயணிகள் வாகனங்களுக்காக காத்திருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், கதவுகள் மற்றும் முனையங்களை முறையாக பயன்படுத்துதல், எரிபொருள் சேமிப்பு மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்தல், விமான சேவைகளின் முன்னறிவிப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் இந்த கூட்டு குழு கவனம் செலுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு எடுக்கும் இந்த நடவடிக்கையின் மூலமாக விமான நிலையத்தில் ஏற்படும் காலதாமதம் குறைக்கப்படுகிறது. அதேப்போல் விமானங்கள் சென்று திரும்பும் கால அவகாசம் குறைவது, நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பது இருக்காது, பயணிகளின் பயண அனுபவம் சிறப்பானதாக மாறும் என கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கூட்டமைப்பு குழுவினர் தகவல்களை உடனடியாக பரிமாறிக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சீரமைப்பர். இதனால் ஒரு சில சிக்கல் நேர்ந்த உடனே அது சரி செய்யப்படுகிறது என கூறப்படுகிறது. மேலும் இனிவரும் மாதங்களில் சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு இதுவரை 35 விமானங்கள் போக்குவரத்தில் இருக்கும் என்ற நிலை மாறி தற்போது 45 விமானங்கள் என அதிகரிக்கும் போது நேரிடும் நெரிசல் குறைய குறைக்க இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.