சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் பெரியசாமி, கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி, பழனியம்மாள், ஞானத்தம்பி, மாநில துணை பொது செயலாளர் மங்கல பாண்டியன், வாசுகி, சீனிவாசன், வெங்கடேசன், மாநில செயலாளர்கள் சுமதி, டேனியல், ஜெய்சிங், அம்சராஜ், கோதண்டபாணி, குபேரன், ஹேமலதா, சிவகங்கை மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மாரி உட்பட மாநிலம் முழுவதையும் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் பொதுசெயலாளர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கூறியதாவது, தற்போது உள்ள அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதாவது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு செய்து திட்டத்தை கொண்டு வருவது, ஆறு லட்சம் பணியிடங்களை நிரப்புவது மற்றும் முடக்கப்பட்ட சரண்டர் தொகையை விடுவிப்பது போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

மேலும் 20 மாத நிலுவைத் ஊதியம் வழங்குவது, சாலை பணியாளர்களுக்கு 41 மாதத்தை வேலை காலமாக அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சந்திப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஆகிய மூன்று கட்ட போராட்டங்களை ஏற்கனவே நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரை முதலமைச்சர் ஆறுமுறை பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். அதனால் வருகிற மார்ச் 28-ஆம் தேதி தமிழக முழுவதும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதிலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். முதலமைச்சர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.