தமிழகத்தில் வனப்பகுதிகளான ஏற்காடு, தேனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், மேட்டூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கிறது. இந்த மலையற்ற பயிற்சிக்கு என தனி குழுக்களும் செயல்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வன சரகர் ஆகியோரிடம் அனுமதி பெற்று அதன் பின்பு மலையேற்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கடந்த 2018 -ஆம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் பயிற்சியில்  ஈடுபட்டிருந்த இளைஞர்கள் காட்டுத் தீயில் சிக்கியதை தொடர்ந்து கோடை காலங்களில் மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை. தற்போது வெயில் வாட்டி வதக்க தொடங்கியுள்ள காரணத்தினால் வனப்பகுதியில் காட்டு தீ பரவும் அபாயம் இருக்கிறது. அதனால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கோடைகால முடியும் வரை மலையேற்ற பயிற்சிக்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட வனசரகர் பெருமாள் கூறியதாவது, கொல்லிமலையில் புளியச்சோலை, முள்ளுகுறிச்சி, எருமப்பட்டி, ஏணிக்கல்தடம், காரவல்லி, வேளுக்குறிச்சி அடுத்த பழனியப்பர் கோவில் பகுதிகளில் மழையேற்ற பயிற்சிக்கான பாதைகள் அமைந்துள்ளது. ஆனால் தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வனப்பகுதியில் காட்டு தீ பரவும் அபாயம் இருக்கிறது. அதனால் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூன்று மாதத்திற்கு மலையேறும் பயிற்சிக்கு தடை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து மலைப்பகுதியில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் அனுமதி இல்லாமல் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.