தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவிக் குழுக்கான சிறு கடன்களை வழங்கி வருகிறது. இதில் சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் அல்லது தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் காய்கனி கடை, பல காரக்கடை, கைத்தொழில்கள், சிறு வணிகம், பூ வியாபாரம், மீன் வியாபாரம் போன்றவற்றை நடத்த கடன் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விண்ணப்பதாரர் சிறுபான்மை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அவர்கள் குழுவில் குறைந்தது 6 மாதம் சேமித்தல், கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். குழுவில் 60% சிறுபான்மையினராக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 40% பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / இதர வகுப்பினர் இடம்பெறலாம்.

இதில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்களும், குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் இரண்டு திட்டங்கள் உள்ளது. முதல் திட்டத்தின் அடிப்படையில் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும்.

ஒரு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியாகும். அதிகபட்சமாக 3 ஆண்டுக்குள் தவணைத் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3  லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் கடன் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு வட்டி விகிதம் 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமாகும். அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் தவணை தொகையை வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்த வேண்டும். இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.