டெல்லியில் இன்றும்,  நாளையும் நடைபெறும் G 20  மாநாட்டில் முதல் நாளான இன்று கூட்டறிக்கை வெளியிடுவது குறித்து கருத்து ஒற்றுமை  ஏற்பட்டது. பல மாதங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்  நடந்து வந்த நிலையிலையே கூட்டறிக்கை வெளியிடப்படுமா ? அப்படி கூட்டறிக்கை  வெளியிடப்பட்டால் ? அதை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்வார்களா ? என்று பல்வேறு விதமான சந்தேகங்கள் இருந்தன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பல்வேறு நாடுகளின் தூதர்கள்  மற்றும் அமைச்சர்களுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அறிக்கையின் ஒவ்வொரு பத்தியும்,  அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அனைவரும் அதை ஒத்துக் கொண்டால் மட்டுமே அது ஒருமனதாக  நிறைவேற்றப்படுகிறது என அறிவித்து,  அதை வெளியிட முடியும்.

அந்த வகையில் இன்று இந்தியாவிற்கு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. G 20யின் தற்போதைய தலைவர்  என்கின்ற முறையிலே பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்:

பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.

உக்ரைன் பிரச்சினை பேச்சுவார்த்தை இல் தீர்வு:

உக்ரைனில்  நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐநா சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலை நிறுத்தும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்,  ஐக்கிய நாடு சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம். உக்கிரன் – ரஷ்யா போர் தொடர்பாக ஜி-20 மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு ஆயுத மிரட்டலை ஏற்க முடியாது:

அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ,  அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில் ஜி 20 நாடுகள் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற தீர்மானம்:

ஜி 20 உறுப்பு நாடுகள் இடையே வணிகம் செய்வதை எளிதாக்கவும்,  செலவை குறைப்பதற்கும் தீர்மானம். வணிகம் செய்வதை எளிதாக தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற ஜி-20 நாடுகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  உலக பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டுக்கான வழிகாட்டுதலை டெல்லி உச்சி மாநாடு வழங்கி உள்ளது.

பயங்கரவாதத்திற்கு ஜி 20 மாநாடு கண்டனம்:

அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் கண்டனம் தெரிவித்து ஜி 20 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசுமை இல்லா வாயுக்கள்;  43 சதவீதம் குறைக்க தீர்மானம்:

பசுமை இல்லா வாயுக்கள் வெளியிடுதல் 2030க்குள் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சந்திராயன் 3 திட்ட வெற்றிக்கு ஜி 20 நாடுகள் வாழ்த்து:

சந்திராயன் – 3  திட்ட வெற்றிக்கு இந்தியாவிற்கு ஜி 20 உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.  நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரா திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.