திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலமாக லட்டு பிரசாதம் மற்றும்  தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது போன்றவற்றிற்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்திருக்கின்றனர் என்பதை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

வருகிற மார்ச் ஒன்றாம் தேதி முதல் இந்த தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் நிரந்தரமாக இது அமலுக்கு கொண்டுவருவது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் ஒரு பக்தர் அதிக டோக்கன் வாங்குவதை தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாகவும் இலவச தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு முறைகளில் வெளிப்படை தன்மையை மேம்படுத்துவது, வருகை தரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவைகளை வழங்குவதாகும்  என தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.