புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், திருமயம், பொன்னமராவதி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்த மூன்று பேரை வனத்துறையினர்பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வராப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அருண், வீரபாண்டியன், உருமைய்யா என்பது தெரியவந்தது. மூன்று பேரும் முயல்களை வேட்டையாடியுள்ளனர்.

இதனால் அருண் உட்பட மூன்று பேரையும் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இறந்த நிலையில் ஒரு முயல், உயிருடன் இருந்த முயல், வேட்டைக்கு பயன்படுத்திய டார்ச், ஓவி அதிர்வு எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வன உயிரினங்களை வேட்டையாடினாலோ, தொந்தரவு செய்தாலோ, வீட்டில் வளர்த்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.