திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தொழில்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 11 மணிக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. விடுமுறை தினம் என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.