ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக விஜயாவின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட 1 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுபற்றி அறிந்த சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விஜயாவின் குடும்பத்தினருக்கு பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.