திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் புகழ்பெற்ற மண்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே குடிசைகளால் ஆன பத்துக்கும் மேற்பட்ட தேங்காய், பழம், பூ விற்பனை கடைகள் அமைந்துள்ளது. நேற்று மதியம் கடைகளில் திடீரென தீ பிடித்து எரிந்து வேகமாக பரவியது. மேலும் அருகில் இருந்த காளியம்மாள் என்பவரது வீடு மீதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக கடைக்காரர்கள் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 கடைகள், காளியம்மாளின் வீடு, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.