கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சன்விளை பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோர்ட் சாலையில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் 15,490 ரூபாய்க்கு வாங்கிய செல்போன் 5 மாதங்களிலேயே பழுதானது. இதனால் சுரேந்தர் செல்போனை கடைக்காரரிடம் கொடுத்து பழுதை சரி செய்து தருமாறு கூறியுள்ளார். அப்போது 4,167 ரூபாய் கொடுத்தால் பழுதை பார்த்து தருவதாக கடைக்காரர் கூறியுள்ளார். அப்போது வாரண்டி காலம் முடிவடையாத நிலையில், ஏன் பணம் கேட்கிறீர்கள்? என சுரேந்தர் கேட்ட போதும் கடைக்காரர் பணத்தை தருமாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சுரேந்திரன் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் செல்போன் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 10 ஆயிரம் ரூபாய் அபராதம், வழக்கு செலவு தொகை 5,000, செல்போனுக்காக செலுத்தப்பட்ட பணம் 15,490 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.