
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலிழந்துள்ளது. அதாவது ரீசார்ஜ் முறையாக செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்த நிலையில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கு ஒரு புதிய சிம் கார்டுகளை ஒதுக்குவார்கள்.
அந்த வகையில் அந்த மொபைல் நம்பர் சஜித் சத்தர் (57) என்பவருக்கு கிடைத்தது. அவர் குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் வசித்து வருகிறார். அவருடைய மகன் சாகில் ரங்கேஷ் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சஜித் சத்தரின் மொபைலுக்கு இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கு தொடர்பாக பல குறுஞ்செய்திகள் வந்துள்ளது.
இதனைப் பார்த்த அவர் தனது மகனிடம் கூறியபோது, அவர்கள் இருவரும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திருட திட்டம் தீட்டினர். அதன்படி வங்கி கணக்கின் பாஸ்வேர்டை கண்டுபிடித்து அதில் இருந்த பணத்தை எடுத்து சில ஆடம்பர செலவுகளை செய்தனர்.
தந்தையும், மகனும் சேர்ந்து வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் சென்று வந்ததோடு மட்டுமல்லாமல் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து தங்களுடைய வீட்டையும் சரி செய்துள்ளனர். இவர்களின் திட்டம் காவல் துறையினருக்கு தெரிய வந்த நிலையில் அவர்களிடம் சென்று விசாரணை நடத்திய போது பல உண்மைகள் தெரிய வந்தது.
அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து தவறாக பயன்படுத்தி வந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.64 லட்சம் வரையில் திருடியதாக கூறப்படும் நிலையில், அவர்களை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.