இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அனைத்து விதமான அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு தற்போது ஆதார் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.‌ இந்த ஆதான் கார்டில் அடிக்கடி பல்வேறு விதமான புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது UIDAI ஆதாரில் நேர்முகமாக தகவல் சரிபார்க்கும் முகமைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்பிறகு சட்டபூர்வமான நோக்கங்களுக்காக தானாக முன்வந்து ஆதார் சரிப்பார்க்கும் நிலையில் குடிமகன்களின் நம்பிக்கையை விரிவுபடுத்தும் விதமாகவும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆதார் வைத்திருப்பவரின் அனுமதியோடு ஆதார் தகவல்களை சரிபார்ப்பு நிறுவனங்கள் சரி பார்க்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேர்முக சரிபார்ப்பு நடத்தும்போது ஆதார் குறித்த பாதுகாப்புகளை உறுதி செய்வது முக்கியம். ஆதார் கார்டு பயன்படுத்துபவர்களின் ஒப்புதல் பெறப்பட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் எதிர்காலத்தில் தணிக்கை செய்யும்போது இந்த ஆவணங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உதவும். ஆதார் அடையாள அட்டையை அதன் மின்னணு வடிவத்தை ஏற்பதற்கு பதில் ஆதார் கடிதம், இ ஆதார், எம்-ஆதார், பிவிசி அட்டை ஆகிய 4 வடிவங்களில் ஏதாவது ஒன்றினை பயன்படுத்தி கியூஆர் கோடு சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி ஆதார் நேரடி சரிபார்ப்பு முகமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.