ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல் அலுவலர் சிவகுமார் ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2021 சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ற ஒற்றை செங்கல்லை வைத்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து அசத்தினார். அந்த யுத்தி திமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இதனிடையே 2024 தேர்தலுக்கும் அதே செங்கல்லை தான் பயன்படுத்துவேன் என ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கும் அதே யுத்தி தானா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.