ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் இன்று காலை அமமுக துணை பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பலரும் அமமுக போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.