கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு அடிக்க தண்ணீரில் கலந்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் என நினைத்து குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமையா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.