தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவானந்தம் தனியார் பேருந்தில் பட்டுக்கோட்டை சென்றார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்பக்க படிக்கட்டில் நின்று சிவானந்தம் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை முக்கத்தில் பேருந்து சென்றபோது படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த சிவானந்தம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தார். பின்னர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சிவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவானந்தத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.