கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி கணேசபுரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த டிரைவரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக அறையின் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது ராஜ்குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் திருமண தகவல் இணையதளத்தின் மூலம் விவாகரத்து ஆன ஒரு பெண் எனக்கு அறிமுகமானார். அந்த பெண்ணை நான் காதலித்து வந்தேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.