திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை குழுவை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நியமித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் காவல்துறையினர் தன்னை கொடுமைப்படுத்தி பற்களை பிடுங்கியதாக வீடியோ வெளியிட்ட சூர்யா என்ற நபர் தற்போது போலீசார் தன்னை அடித்து பல்லை பிடுங்கவில்லை. நான் கீழே விழுந்ததால் என் பற்கள் உடைந்து விட்டது என ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். மேலும் திடீரென சூர்யா தான் கீழே விழுந்ததால் தான் பற்கள் உடைந்தது என அந்தர்பல்டி அடித்தது பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.