இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவரின் செல்போனைப் பறித்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

விமான நிலையத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த பும்ராவிடம், ரசிகர் ஒருவர் அனுமதியின்றி ரகசியமாகச் செல்பி வீடியோ எடுக்க முயன்றதுதான் மோதலுக்குக் காரணமாகியுள்ளது.

வீடியோ எடுப்பதைப் பார்த்த பும்ரா, முதலில் அமைதியாக எச்சரித்தும் அந்த ரசிகர் கேட்காமல் பும்ராவைத் தொடர்ந்தே வீடியோ எடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில் கோபமான பும்ரா மராத்தியில், “உன் போன் கீழே விழுந்தால் என்னைக் கேட்காதே” என்று எச்சரித்தார். அதற்கு அந்த ரசிகர் பரவாயில்லை என்று சொல்ல, ஆத்திரமடைந்த பும்ரா அந்தத் தொலைபேசியைப் பிடுங்கித் தூக்கி எறிந்தார்.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, “பும்ராவின் நடத்தை மிகவும் அகங்காரமானது” என ஒரு தரப்பினரும், “பிரபலங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) இல்லையா?” என மற்றொரு தரப்பினரும் இணையத்தில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.