மகாராஷ்டிரா மாநிலம் உல்காஸ் நகரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 73 வயதான காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரே, பிரதமர் நரேந்திர மோடியின் உருமாற்றப்பட்ட படத்தை சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், பகாரேவுக்கு கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

பொது இடத்தில் பகாரேவைக் கண்டபோது, அவரை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக சேலை அணிவித்து அவமானப்படுத்தினர். இந்த செயலுக்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், “இதே போன்று மீண்டும் பதிவிட்டால் கடும் விளைவுகள் எதிர்நோக்க வேண்டி இருக்கும்” எனக் கூறி அவரை பாஜக தொண்டர்கள் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பகாரே, “நான் அந்த பதிவை உருவாக்கவில்லை, forward தான் செய்தேன் என்று கூறியுள்ளார். இருந்தும் சந்தீப் மாலி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் என்னை மருத்துவமனை வாசலில் கைப்பற்றி மிரட்டினர். அவர்களுக்கெதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், உள்ளூர் பாஜக தலைவர் நரேந்திர சர்மா இதுகுறித்து பதிலளிக்கையில், “பிரதமர் மோடிக்கு எதிராக அவமதிப்பாக பதிவிட்டதை ஏற்க முடியாது. இது மீண்டும் நடந்தால், இதேபோல் நாங்கள் செயல்படுவோம்” எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.