குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஒரு பெண்ணை மறித்த டிராஃபிக் போலீஸ், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலி சந்திப்பு பகுதியில் பன்சாரி தாக்கர் என்ற பெண்ணை மறித்த போலீஸ்காரர், அவரது ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டுள்ளார்.

அப்போது அந்தப் பெண், பதிலுக்கு போலீஸ்காரரிடம் அவரது அடையாள அட்டையைக் (ID Card) காட்டுமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த போலீஸ்காரர், அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு, அவரது வாகனத்தையும் எட்டி உதைத்து அநாகரீகமாகப் பேசியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் அந்தப் பெண்ணின் கண் மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, “இது குஜராத் மகள்களின் கண்ணியத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” எனச் சாடியுள்ளார்.

சட்டத்தைக் கையில் எடுத்த அந்த போலீஸ்காரரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் புகாரைப் பெற மறுத்து மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.