தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.

வருவாய் அதிகாரி தலைமையில் தினசரி சந்தையில் இருக்கும் மூன்று கடைகளுக்கு வாடகை பாக்கியிருப்பதாக பூட்டு போடப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு செய்து சந்தை நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.பி.கே பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதை அடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மூன்று கடைகளும் திறக்கப்பட்டது.

தினசரி சந்தை இடம் மாற்றம், புதிய கட்டுமான முயற்சி, அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கட்டுமானம் குறித்த வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் எனவும் இடமாற்றம் செய்யப்படும் புது இடத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் தெரிவித்தார்கள். உதவி ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தார்கள். அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்