மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் போபால் பகுதிகளில் தற்போது ‘டெலிவரி ஸ்கேம்’ (Delivery Scam) எனும் புதிய வகை ஆன்லைன் மோசடி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது சகோதரருக்கு வந்த ஒரு சாதாரண போன் கால் எப்படி மொத்த வங்கி கணக்கையும் முடக்கியது என்பதை விளக்கியுள்ளார்.
“டெலிவரி பார்ட்னர்” என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், ஒரு மொபைல் எண்ணைக் கொடுத்து அதற்கு கால் செய்யச் சொன்னதே இந்த மோசடியின் ஆரம்பம். ஆன்லைன் ஆர்டர்கள் என்பது சாதாரண விஷயம் என்பதால், சந்தேகமின்றி அந்த எண்ணிற்கு கால் செய்துள்ளார் அவரது சகோதரர்.
View this post on Instagram
அந்த மர்ம நபர் சொன்ன ‘செட்டிங்ஸ்’ மாற்றங்களைச் செய்த சில நிமிடங்களிலேயே, அவரது சகோதரரின் வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கு முற்றிலும் ஹேக் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வங்கி கணக்குகளையும் ஹேக்கர்கள் முடக்க முயற்சி செய்துள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் உடனடியாக வங்கிக்குச் சென்று கணக்கை ‘ஹோல்ட்’ (Hold) செய்ததால் பெரும் பண இழப்பு தவிர்க்கப்பட்டது.
“தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நம்பி உங்கள் போனில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்; லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்” என சைபர் கிரைம் போலீஸார் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
