டான்சர் ரமேஷ் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

டிக் டாக் மற்றும் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தமிழ் திரைப்படங்களிலும் நடனமாடியுள்ளார். அஜித்தின் துணிவு திரைப்படத்திலும் இவர் நடனமாடியுள்ளார். இதற்கு முன்பாக ரஜினியுடன் இணைந்து நடனமாடியிருக்கின்றார். மேலும் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடனமாடி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்ற நிலையில் முதல் மனைவி சித்ரா தனது இரண்டு மகள்களுடன் மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வருகின்றார்.

இவர் பிரபலமான பிறகு இரண்டு மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் கே.பி.பார்க் பகுதியில் இருக்கும் இரண்டாவது மனைவி இன்பவள்ளியின் வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஜனவரி 28 தேதி அவர் பிறந்த நாளன்று தனது இரண்டாவது மனைவியிடம் நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் மனைவி பணம் தர மறுத்துள்ளார்.

இந்த விரக்தியில் இருந்த அவர் புளியந்தோப்பில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதன்பின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இரண்டாவது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் முதல் மனைவி சித்ரா தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்திருக்கின்றார். இதனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.