சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள் சாந்தஷீலா(33) முதுகலை பட்டத்துடன் எம்.எட் படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு சமயபுரத்தில் செந்தில் குமாருக்கும், சாந்த ஷீலாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது தான் நடுகாவிரிபாளையத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவதாக செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதனை நம்பி சாந்தஷீலாவின் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு கணவன், மனைவி இருவரும் கோபிக்கு தனி குடித்தனம் வந்தனர்.

அப்போதுதான் செந்தில் குமார் நிரந்தர ஆசிரியராக வேலை பார்க்கவில்லை என்பதும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பதும் சாந்த ஷீலாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது தான் தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பதாக செந்தில் குமார் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக சாந்தஷீலா கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் ஏமாற்றி மோசடியாக என்னை திருமணம் செய்து செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கோபி முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு பள்ளி ஆசிரியர் எனக்கூறி சாந்த ஷீலாவை ஏமாற்றி திருமணம் செய்த செந்தில்குமாருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.