அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவித்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயமணி என்பவருக்கும், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திக் பவித்திரனிடம் ஜெயமணி குறித்து விசாரித்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த ஜெயமணி இரவு 11 மணிக்கு பவித்திரனின் வீட்டிற்கு சென்று கார்த்தி கேட்டது தொடர்பாக விசாரித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெயமணி கத்தியால் பவித்திரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த பாலசுப்பிரமணியனையும் ஜெயமணி சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஜெயமணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.