திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாமஸ் என்பவர் எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாபு தாமஸ் கல்லூரி வளாகத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தாமஸ் பாபு எதிர்பாராதவிதமாக நெஞ்சு வலி ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பாபு தாமசை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.