மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் விஸ்வநாதன்- ஜான்சி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர்கள் 80-க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு நடத்தி மாதம் 300 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாங்கினர். இதனையடுத்து சீட்டு 11 மாதம் முடிவடைந்த நிலையில் விஸ்வநாதனும் அவரது மனைவி ஜான்சி ராணியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் தென் மண்டல ஐ.ஜியிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் விஸ்வநாதன், ஜான்சி ராணி தம்பதியினர் ஏலச்சீட்டு தீபாவளிச்சீட்டு, நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.