தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை முதல்வர் ஸ்டாலின்  மேற்கொண்டார். அந்த மாவட்டங்களில் நடக்கும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்துவிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 5ஆம் தேதி திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் கள ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்கிறார். இதில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.