சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று காலையில் தனியார் ஐ.டி. நிறுவன பேருந்து ஒன்று பணியாளர்களை இறக்கிவிட்டு, பின் டோல்கேட் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தது. அப்போது திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் அருகில் செல்லும் போது பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் உள்ள ‘டூல்ஸ் பாக்ஸ்’ வைத்திருக்கும் பெட்டியின் கதவு திறந்துள்ளது. பின் வெளியே நீட்டியபடி இருந்ததாகவும், அதனை பஸ் டிரைவர் யுகேந்திரன் கவனிக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனையடுத்து பேருந்து வேகமாக சென்றபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த யாஸ்மின்(34) மற்றும் வெங்கடேசன் (27) ஆகிய  இருவர் மீது ‘டூல்ஸ்’ பெட்டியின் கதவு இடித்துள்ளது.

இச்சம்பவத்தில் வெங்கடேசன் என்பவர் தூக்கி வீசப்பட்டு, சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள பள்ளத்தை மறைந்து வைத்து இருந்த இரும்பு தடுப்பின் மீது கீழே விழுந்தார். இதனால் வெங்கடேசனுக்கு தலையில் பலமாக அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் யாஸ்மின் கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் யுகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.